கரோனா பொதுமுடக்கம் காரணமாக மகாராஷ்டிர மாநிலத்தில் மூடப்பட்டிருந்த திரையரங்குகள் அக்டோபர் 22ஆம் தேதி முதல் மீண்டும் திறக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
கரோனா இரண்டாம் அலையின் தாக்கம் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பல்வேறு மாநிலங்களும் பொதுமுடக்கத்தை அறிவித்து செயல்படுத்தின. அதன் ஒருபகுதியாக பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான திரையரங்குகள், பூங்காக்கள் உள்ளிட்டவை தற்காலிகமாக மூடப்பட்டன.
மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திரையரங்குகள் திறக்கப்பட்ட நிலையில் கரோனா இரண்டாம் அலையின் காரணமாக மீண்டும் மூடப்பட்டது. பல்வெறு மாநிலங்களில் தொற்று பரவல் கட்டுக்குள் வந்தாலும் மகாராஷ்டிரத்தில் தொடர்ச்சியாக அதிகரித்தவண்ணம் இருந்தது.
இந்நிலையில் தற்போது மாநிலம் முழுவதும் கரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளதையடுத்து திரையரங்குகள் மற்றும் பொது அரங்குகளை மீண்டும் திறக்க அம்மாநில அரசு அனுமதியளித்துள்ளது.
இதையும் படிக்க | தில்லியில் கடந்த 10 நாள்களில் 139 பேருக்கு டெங்கு பாதிப்பு
திரையரங்குகளில் 50 சதவிகிதத்தினர் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ள மாநில அரசு கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கட்டாயம் பின்பற்ற அறிவுறுத்தியுள்ளது.