புது தில்லி: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, இரண்டு நாள் பயணமாக செப்டம்பர் 9ஆம் தேதி ஜம்மு செல்கிறார்.
ஜம்மு செல்லும் ராகுலின் பயணத் திட்டத்தில், முதலில் மாதா வைஷ்ணோ தேவி கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் மேற்கொள்வதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மாதா வைஷ்ணோ தேவி கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு, ஜம்முவில் இரவு தங்கும் ராகுல், செப்டம்பர் 10ஆம் தேதி காந்திநகரில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்கிறார். பிறகு, உள்ளூர் தலைவர்களுடன் மதிய உணவை சாப்பிடும் ராகுல், பிறகு மாலையில் தில்லி திரும்புகிறார் என்று அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்ட பிறகு ராகுல் ஜம்முவுக்குச் செல்வது இது இரண்டாது முறையாகும். இதற்கு முன்பு கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி பயணம் மேற்கொண்டிருந்த ராகுல், ஸ்ரீநகரில் கட்சி அலுவலகத்தைத் திறந்து வைத்தார். அப்போது கீர் பவானி கோயில் மற்றும் ஹஸ்ரத் தர்கா ஷரீப்ஃபுக்கும் பயணம் மேற்கொண்டிருந்தார்.