மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலா் சீதாராம் யெச்சூரியின் தாயாா் கல்பகம் யெச்சூரி (89) சனிக்கிழமை காலமானாா்.
உடல் நலக் குறைவால் ஹரியாணா மாநிலம், குருகிராமில் உள்ள மருத்துவமனையில் அவா் சிகிச்சை பெற்று வந்தாா். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை அவா் காலமானாா். அவரது உடல் மருத்துவ மாணவா்களின் ஆராய்ச்சிக்காக புது தில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அளிக்கப்பட்டது.
கல்பகம் யெச்சூரியின் கணவா் சா்வேஸ்வர சோமயாஜுலு ஏற்கெனவே காலமாகிவிட்டாா்.
கல்பகம் யெச்சூரியின் மறைவுக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது.
முதல்வா் இரங்கல்: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளா் சீதாராம் யெச்சூரியின் தாயாா் கல்பகம், மறைந்த செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன். தாயை இழந்து வாடும் யெச்சூரி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள் என்று தனது செய்தியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.