தில்லி உயர்நீதிமன்றத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர் புதன்கிழமை திடீரென துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தில்லி உயர்நீதிமன்றத்தின் 3வது நுழைவு வாயிலில் ராஜஸ்தானை சேர்ந்த டின்கு ராம் என்ற காவலர் இன்று காலை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென தான் வைத்திருந்த துப்பாக்கியால் காலை 9.30 மணியளவில் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இதுகுறித்து காவல் துணை ஆணையர் தீபக் யாதவ் கூறியது:
“காவலர் ஒருவர் தனது துப்பாக்கியால் தற்கொலை செய்து கொண்டார். அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தற்கொலைக்கான காரணம் குறித்து எவ்வித கடிதமும் இல்லை. மேலும், தற்கொலை குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.”
கடந்த வாரம் தில்லி ரோஹினி நீதிமன்றத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் ரெளடி உள்பட 3 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.