தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் சந்தித்து வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினார்.
பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங், அம்மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக கடந்த 18-ம் தேதி முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார்.
இதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் உயர் அதிகாரிகளுடன் சித்து நெருக்கமாக இருப்பதால் இந்தியாவுக்கு ஆபத்து என அமரீந்தர் விமர்சித்திருந்தார்.
இந்நிலையில், தில்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ள அமரீந்தர் சிங் இன்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை நேரில் சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
முன்னதாக நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து வேளாண் சட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
தில்லியில் முகாமிட்டுள்ள அமரீந்தர், பாஜகவின் மேலும் சில தலைவர்களை சந்தித்து அக்கட்சியில் இணைய வாய்ப்புள்ளதாக தகவல் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.