பத்தனம்திட்டா: ஜஸ்னா சலீம், கோழிக்கோட்டைச் சேர்ந்த முஸ்லிம் பெண். சில ஆண்டுகளுக்கு முன்பு, இவர் வரைந்த கிருஷ்ணர் ஓவியங்களால் பிரபலமடைந்தவர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, 28 வயதாகும் ஜஸ்னா, தனது கனவு நனவாகப் போகும் உற்சாகத்தில் இருந்தார். காரணம், கிருஷ்ணர் கோயிலுக்குள் சென்று, அவர் வரைந்த கிருஷ்ணர் ஓவியத்தை அந்தக் கோயிலுக்காக வழங்கும் நற்பேறு பெற்றதால் கிடைத்த மகிழ்ச்சிதான்.
இதையும் படிக்கலாமே.. 51 சக்தி பீடங்களின் மகத்துவம் (முழு விவரங்களுடன்) - நவராத்திரி ஸ்பெஷல்!
கடந்த ஆறு ஆண்டுகளில் அவர் 500க்கும் மேற்பட்ட கிருஷ்ணர் ஓவியங்களை வரைந்துள்ளார். அவரது ஓவியங்கள் பல்வேறு கோயில்களிலும், வழிபாட்டுத் தலங்களிலும், இல்லங்களிலும் வைத்து வழிபடப்படுகிறது.
ஆனால், ஒரு கிருஷ்ணர் கோயிலுக்குச் சென்று, அங்கு குடிகொண்டிருக்கும் தெய்வத்தின் முன், தனது ஓவியத்தை, கோயிலுக்கு வழங்க வேண்டும் என்ற அவரது நீண்ட நாள் ஆசை மட்டும் நிறைவேறவில்லை.
இந்த நிலையில் தான் இவரைப் பற்றி கேள்விப்பட்ட பண்டலத்தில் உள்ள உலநாடு ஸ்ரீ கிருஷ்ணர் கோயிலிலிருந்து இவருக்கு ஒரு அழைப்பு வந்தது. அந்த அழைப்பு வந்ததும் நான் அடைந்த மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது என்கிறார் ஜஸ்னா.
பல கோயில்களுக்கு இவரது ஓவியத்தை பரிசளித்திருந்தாலும், இவரது மதம் காரணமாக, இவர் கோயில்களுக்குள் அதுவும் கருவறைக்கு அருகே அனுமதிக்கப்பட்டதில்லை. முதல் முறையாக, உலநாடு ஸ்ரீ கிருஷ்ணர் கோயிலுக்கு உள்ளே அனுமதிக்கப்பட்டு, அதுவும் கருவறையிலிருக்கும் கிருஷ்ணரின் முன்னிலையில், அவர் தான் வரைந்த கிருஷ்ணர் ஓவியத்தை கோயில் நிர்வாகிகளிடம் வழங்கினார்.
பள்ளி நாள்களில், சின்ன சின்ன ஓவியங்களைக் கூட வரைய முடியாமல் அவதிப்பட்டேன் நான். ஆனால், கிருஷ்ணர் ஓவியத்தை வரைய ஆரம்பித்ததும், மிக அழகாக வந்தது. அது தற்செயலாகவே நடந்தது. வீட்டில் கடைக்குட்டி என்பதால், என்ன கண்ணா என்று அன்போடு அழைப்பார்கள். எனவே, கண்ணன் மீது எனக்கு ஒரு ஈர்ப்பு ஏற்பட்டு, அவரது ஓவியத்தைப் பார்த்ததும் வரைய வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது என்கிறார்.
நான் வரைந்து கிருஷ்ணர் ஓவியங்களை வீட்டில் ஆங்காங்கே வைத்த போது, வீட்டில் சில நல்ல விஷயங்கள் நடந்தன. இதனை வீட்டிலிருந்தவர்களும் உணர ஆரம்பித்தனர். அது எனக்கு கூடுதல் உற்சாகத்தை வழங்கியது. அதிகமான ஓவியங்களை வரைய ஆரம்பித்தேன் என்று கூறினார் ஜஸ்னா.