பிரதமர் மோடியை கிண்டல் செய்யும் விதமாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நண்பர்கள் தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் நண்பர்கள் தினம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) சிறப்பாக கொண்டாடப்பட்டுவருகிறது. இந்நிலையில், பிரதமர் மோடியை கிண்டல் செய்யும் விதமாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நண்பர்கள் தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ராகுல் காந்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஒரு விடியோ வெளியிட்டுள்ளார். அதில், பிரண்ட்ஸ் சீரிஸின் தீம் பாடல் ஒலிக்க தொழிலதிபர்களுடன் மோடி எடுத்த புகைப்படங்கள் இணைக்கப்பட்டு நண்பர்கள் தின வாழ்த்து தெரிவிக்கும் விதமாக எடிட்டிங் செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்தியா நான்கு பேரால் மட்டுமே ஆளப்படுகிறது என ராகுல் காந்தி விமர்சித்திருந்தார். அதேபோல், பிப்ரவரி மாதம் நாடாளுமன்றத்தில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டபோது, மூன்று வேளாண் திருத்த சட்டங்களை விமர்சிக்கும் விதமாக, "தற்போது, நாடு நான்கு பேரால் ஆளப்படுகிறது. அது யார் என்பது அனைவருக்கும் தெரியும்" என்றார்,
1990களில் வெளியாகி ஹிட் அடித்த அமெரிக்க சீரிஸ்களில் ஒன்று பிரண்ட்ஸ். இதற்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.