
கோப்புப்படம்
காபூலிலிருந்து இந்தியத் தூதர் மற்றும் தூதரக அதிகாரிகளை இந்தியாவுக்கு வெளியேற்ற உதவிய அனைவருக்கும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் நன்றி தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதைத் தொடர்ந்து, சர்வதேச நாடுகள் தங்களது தூதரக அதிகாரிகள் மற்றும் குடிமக்களைத் திரும்ப அழைக்கும் பணிகளைத் துரிதப்படுத்தினர். இந்தியாவும் தங்களது அதிகாரிகளை உடனடியாகத் திரும்ப அழைக்கும் என வெளியுறவுத் துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
இதைத் தொடர்ந்து, இந்திய விமானப் படையின் சி-17 விமானம் மூலம் காபூலிலிருந்து 120 இந்திய அதிகாரிகள் திரும்ப அழைத்து வரப்பட்டனர். அவர்கள் அனைவரும் குஜராத் மாநிலம் ஜாம்நகரில் வந்திறங்கினர்.
இந்த நிலையில், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.
ஜெய்சங்கர் ட்விட்டர் பதிவு:
"இந்தியத் தூதர் மற்றும் தூதரக அதிகாரிகளை காபூலிலிருந்து இந்தியாவுக்கு வெளியேற்றுவது என்பது கடினமான சிக்கல் நிறைந்த பணி. இதற்கு ஒத்துழைப்பு தந்து அதை சாத்தியமாக்கிய அனைவருக்கும் நன்றி."