கல்வி வழிகாட்டுதல் என்ற புதிய திட்டத்தை தில்லி அரசு அறிவித்துள்ளது. கல்விக்கான இளைஞர்களின் முயற்சி என்ற முன்னெடுப்பின் கீழ் அறிவிக்கப்பட்ட இத்திட்டத்தின்படி, இந்திரா காந்தி தில்லி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தை சேர்ந்த பி.டெக், எம்.டெக், பிஎச்டி படிப்பை மேற்கொண்டுவரும் 200 மாணவர்கள், அரசு பள்ளி மாணவர்களுக்கு உயர் கல்வி குறித்த வழிகாட்டுதல்களை வழங்கவுள்ளனர்.
இத்திட்டத்தின் பிராண்ட் அம்பாசிடராக பாலிவுட் நடிகர் சோனு சூட் அறி்விக்கப்பட்டுள்ளார். திட்டத்தின் அறிமுக விழாவில் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், சோனு சூட் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய கேஜரிவால், "விரைவில் அமல்படுத்தப்படவுள்ள இத்திட்டத்தின் பிராண்ட் அம்பாசிடராக இருக்க சூட் ஒப்பு கொண்டுள்ளார். எங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியாக உள்ளது" என்றார்.
அரசியலுக்கு வர திட்டமிருக்கிறதா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "அரசியல் பற்றி விவாதிக்கவில்லை. இது அதைவிட பெரிய விவகாரம். நல்லது செய்ய வேண்டும் என்றால் அரசியலுக்கு வர வேண்டும் என மக்கள் கூறுவர். இது ஒரு அற்புதமான துறை. ஆனால், இதுகுறித்து விவாதிக்கவில்லை" என்றார்.
சூட் குறித்து பேசிய கேஜரிவால், "ஒட்டு மொத்த நாட்டுக்கும் சூட் உத்வேம் அளிக்கிறார். நாட்டில் யாருக்கு பிரச்னை என்றாலும் அவர்களை தொடர்புகொண்டு உதவி செய்கிறார். இது அவரின் இயல்பு" என்றார்.