12 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்தது தொடர்பாக எதிர்க்கட்சியினரின் தொடர் அமளியால் மாநிலங்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மாநிலங்களவை ஒத்திவைப்புக்குப் பிறகு தொடங்கியபோது, 12 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே எழுப்பினார். ஆனால், "இந்த விவகாரம் நேற்றே விவாதிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டதால், இதுகுறித்து பேச அனுமதிக்கப்படாது" என மாநிலங்களவைத் துணைத் தலைவர் ஹரிவன்ஷ் கார்கே கோரிக்கையை நிராகரித்தார்.
இதையும் படிக்க | எதிர்க்கட்சிகள் அமளி: மாநிலங்களவை பகல் 12 மணிவரை ஒத்திவைப்பு
இதனிடையே காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடுமையான வாக்குவாதத்தைத் தொடங்கினர். உணவு தானியங்கள் கொள்முதல் தொடர்பான தேசியக் கொள்கை குறித்த தங்களது கோரிக்கைகளை முழக்கங்கள் மற்றும் பதாகைகள் மூலம் டிஆர்எஸ் உறுப்பினர்கள் எழுப்பினர்.
கடும் அமளி காரணமாக, மாநிலங்களவைத் துணைத் தலைவர் அவையை மதியம் 2 மணி வரை ஒத்திவைத்தார்.
முன்னதாக, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக மாநிலங்களவையில் இதுபோன்ற போராட்டம் செவ்வாய்க்கிழமையும் அரங்கேறியது. மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு விளக்கமளிக்கையில், ஜனநாயகத்தைப் பாதுகாக்கவே அவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதாகக் கூறினார்.