மகாராஷ்டிரத்தில் ஒமைக்ரான் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நபருடன் தொடர்பிலிருந்தவர்களுக்கு கரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுவிட்டதாக மகாராஷ்டிர சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் நான்காவதாக மகாராஷ்டிரத்தில் ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இருப்பது சனிக்கிழமை மாலை தெரியவந்தது. தென் ஆப்பிரிக்காவிலிருந்து திரும்பிய நிலையில் அவருக்கு ஒமைக்ரான் வகை பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | மகாராஷ்டிரத்தில் ஒருவருக்கு ஒமைக்ரான்
இதுபற்றி மகாராஷ்டிர சுகாதாரத் துறை கூறியிருப்பது, "ஒமைக்ரான் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள 33 வயதுடைய இவர் கேப்டவுனிலிருந்து துபை மற்றும் தில்லி வழியாக நவம்பர் 24-ம் தேதி மும்பை வந்தார். அவர் எந்தத் தடுப்பூசியும் செலுத்திக் கொள்ளவில்லை. அவருடன் தொடர்பிலிருந்த 23 பேர் மற்றும் நெருக்கமாகத் தொடர்பிலிருந்த 12 பேர் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்கள் அனைவருக்கும் தொற்று பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கூடுதலாக தில்லி-மும்பை விமானத்தில் அவருடன் பயணித்த 25 சக பயணிகளுக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களுக்கும் தொற்று பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருடன் மேலும் தொடர்பிலிருந்தவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது."