புது தில்லி: குன்னூர் அருகே நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி பலியான முப்படைகளின் தலைமை தளபதி விபின் ராவத் உள்பட 13 பேரின் உடல்களும் சூலூரிலிருந்து தில்லி கொண்டு செல்லப்பட்டது.
வெலிங்டனிலிருந்து சாலை வழியாக ஆம்புலன்ஸ்களில் சூலூர் கொண்டுச் செல்லப்பட்டு அங்கிருந்து விமானம் மூலம் அனைத்து உடல்களும் தில்லி கொண்டு செல்லப்பட்டது.
இந்த நிலையில், உடல்களை அடையாளம் காண்பது மற்றும் உறவினர்களிடம் ஒப்படைப்பது குறித்து இந்திய ராணுவம் சில தகவல்களை வெளியிட்டுள்ளது.
இதையும் படிக்க.. தேஜஸ் விமான விபத்தை தவிர்த்ததற்காக விருது பெற்றவர் வருண் சிங்
அதில், ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய சிலரது உடல்கள் உருகுலைந்திருப்பதால், அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, இறந்தவர்களின் உறவினர்கள் அடையாளம் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது மிகவும் உணர்வுப்பூர்வமான விஷயம் என்பதால், உறவினர்கள் அடையாளம் காண அனைத்து விதமான உதவிகளும் மேற்கொள்ளப்படும்.
ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் அனைத்தும், அவர்களது நெருங்கிய உறவினர்கள் அடையாளம் காட்டிய பிறகே ஒப்படைக்கப்படும். அதாவது, நெருங்கிய உறவினர்கள், உடல்களை உறுதியாக அடையாளம் காட்டிய பிறகு, அவர்களிடம் ஒப்படைக்கப்படும். உடல்கள் அடையாளம் காணப்பட்டு, ஒப்படைக்கப்பட்ட பிறகே, உரிய ராணுவ மரியாதை அளிக்கப்படும்.
இதற்காக, ஹெலிகாப்டர் விபத்தில் பலியானவர்களின் நெருங்கிய உறவினர்களை புது தில்லி வர அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்குத் தேவையான அனைத்து உதவிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. உருகுலைந்த உடல்களை நெருங்கிய உறவினர்கள் அடையாளம் காண அனைத்து உதவிளும் செய்யப்படும், கூடுதலாக அறிவியல்பூர்வ ஆய்வும் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.