
லக்கிம்பூர் வன்முறை
லக்கிம்பூரில் கார் நுழைந்தது மற்றும் வன்முறை சம்பவம் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட சதி என சிறப்பு விசாரணைக் குழு செவ்வாய்க்கிழமை அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெரியில், கடந்த மாதம் அக்டோபர் 3 ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது கார் ஏற்றப்பட்ட சம்பவத்திலும் அதை தொடர்ந்து நடந்த கலவரத்திலும் 4 விவசாயிகள் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரத்தில் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா உட்பட 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ராகேஷ் குமார் ஜெயின் தலைமையில் விசாரணைக் குழுவை கடந்த மாதம் உச்சநீதிமன்றம் நியமனம் செய்தது.
இந்நிலையில், லக்கிம்பூரில் விவசாயிகள் மீது கார் ஏற்றியது மற்றும் வன்முறை சம்பவத்தை ஏற்படுத்தியது தற்செயலாக நடந்தது இல்லை. முன்கூட்டியே திட்டமிடப்பட்ட சதி என விசாரணைக் குழு தெரிவித்துள்ளது.
மேலும், மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் உள்ளிட்ட 13 குற்றவாளிகள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை கொலை வழக்காக மாற்ற வேண்டும் எனவும் உச்சநீதிமன்றத்திற்கு இக்குழு பரிந்துரைத்துள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...