பஞ்சாபில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் சித்து, முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங்குடன் எடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். ஏற்கனவே, சூடுபிடித்துள்ள பஞ்சாப் அரசியல் களத்தை இது மேலும் பரபரப்பாக்கியுள்ளது.
ஹர்பஜனுடன் எடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்து சித்து, "பல்வேறு சாத்தியங்களை உள்ளடக்கிய புகைப்படம். ஷைனிங் ஸ்டார் பஜ்ஜியுடன்" என பதிவிட்டுள்ளார். அடுத்தாண்டு தொடக்கத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் ஹர்பஜன் சிங், யுவராஜ் சிங் ஆகியோர் பாஜகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், சித்து இந்த பதிவை வெளியிட்டுள்ளார்.
முன்னதாக, பாஜகவில் சேரவுள்ளதாக வெளியான செய்திக்கு ஹர்பஜன் மறுப்பு தெரிவித்திருந்தார். கடந்த மக்களவை தேர்தலிலிருந்தே, அவர் அரசியலில் குதிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. "ஏற்கனவே, அரசியலில் அனுபவம் வாய்ந்த பல தலைவர்கள் உள்ளனர். எனவே, அரசியலில் சேர்வதற்கான திட்டம் எதுவும் இல்லை" என ஹர்பஜன் தெரிவித்திருந்தார்.
காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக திகழ்ந்துவரும் அமிர்தசரஸ் மக்களவை தொகுதியில் ஹர்பஜனை களமிறக்க பாஜக திட்டமிட்டதாகவும், அவரை தொடர்புகொண்டதாகவும் செய்திகள் வெளியாகின.
இதையும் படிக்க | லக்கீம்பூர் வன்முறை திட்டமிட்ட சதி: சிறப்பு விசாரணைக் குழு
ஹர்பஜனை தங்கள் கட்சியில் இணைத்து கொள்வதால் காங்கிரஸ், பாஜக கட்சிகளுக்கு புதிய உத்வேகம் கிடைக்கும் என்றே கூறப்படுகிறது. அமரிந்தர் சிங், நவ்ஜோத் சிங் சித்து ஆகியோருக்கிடையே நடைபெற்ற அதிகார போட்டி காரணமாக, பஞ்சாப்பை வென்று விடலாம் பாஜக நம்பிவருகிறது.
கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், 117 தொகுதிகளில் மூன்று இடங்களில் மட்டுமே பாஜக வெற்றிபெற்றது.