புது தில்லி: அண்டைவீட்டுக்காரரைக் கொலை செய்ய ரோகிணி நீதிமன்றத்தில் குறைந்த திறன்கொண்ட வெடிகுண்டை வெடிக்கச் செய்த குற்றத்துக்காக, 47 வயதான டிஆர்டிஓ விஞ்ஞானி ஒருவரை தில்லி காவல்துறை கைது செய்துள்ளது.
இந்த மாதம் 9ஆம் தேதி, புது தில்லியில் உள்ள ரோகிணி மாவட்ட நீதிமன்றத்தில், குறைந்த சக்திவாய்ந்த குண்டு ஒன்று வெடித்தது. நீதிமன்ற அறை 102ல் நடந்த இந்த குண்டுவெடிப்பில் ஒருவர் காயமடைந்தார்.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வந்த காவல்துறையினர், இதில் தொடர்புடைய பாரத் பூஷண் கட்டாரியா என்பவரை வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளது. இவர் டிஆர்டிஓ (பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு)மூத்த விஞ்ஞானியாவார்.
தனது அண்டை வீட்டில் வசிக்கும் வழக்குரைஞர் ஒருவரைக் கொலை செய்யும் நோக்கத்தோடு, சிறிய ரக வெடிகுண்டு ஒன்றை அவர் சிறிய பெட்டியில் வைத்து வெடிக்கச் செய்துள்ளார்.
ஒரே கட்டடத்தில் வசித்து வரும் வழக்குரைஞருக்கும், கட்டாரியாவுக்கும் இடையே மோதல் போக்கு இருந்துள்ளது. இருவரும் ஒருவர் மீது ஒருவர் ஏராளமான வழக்குகளைக் கொடுத்துள்ளனர் என்றும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.