மும்பையில் தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கை புதன்கிழமை 2 ஆயிரத்தைத் தாண்டலாம் என மகாராஷ்டிர சுற்றுலா மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஆதித்ய தாக்கரே தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரத்தில் செவ்வாய்க்கிழமை 2,172 பேர் கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதில் மும்பையில் அதிகளவாக 1,377 பாதிப்புகள் பதிவாகின. இந்த நிலையில், தினசரி பாதிப்பு மும்பையில் 2 ஆயிரத்தைத் தாண்டலாம் என ஆதித்ய தாக்கரே எச்சரித்துள்ளார்.
இதையும் படிக்க | ஆந்திரப் பிரதேசத்தில் மேலும் 10 பேருக்கு ஒமைக்ரான்
மும்பை மாநகராட்சி அதிகாரிகளுடனான கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது:
"மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கையும், தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படும் விகிதமும் குறைவாக இருந்தாலும், கடந்த வாரம் முதல் கரோனா பாதிப்பு எண்ணிக்கைகள் அதிகரித்துள்ளன. பரிசோதனைகள் முடிவுகளின்படி, மும்பை தினசரி பாதிப்பு புதன்கிழமை 2 ஆயிரத்தைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாதிப்பு எண்ணிக்கைகள் அதிகரிப்பதால், யாரும் பயப்பட வேண்டாம்.
மிகவும் பாதுகாப்பாக இருப்போம். தடுப்பூசி செலுத்திக்கொள்வதையும், முகக் கவசம் அணிந்துகொள்வதையும் உறுதி செய்வோம்.
மேலும் அடுத்த 48 மணி நேரத்தில் மும்பை மாநகராட்சி அதிகாரிகள், நகரிலுள்ள அனைத்துக் கல்வி நிலையங்களையும் தொடர்புகொண்டு 15 - 18 வயதுடையவர்களுக்குத் தடுப்பூசி செலுத்துவதற்கான திட்டத்தை வகுக்கவுள்ளார்கள்" என்றார் அவர்.