கர்நாடக முதல்வர் பதவியிலிருந்து ராஜிநாமா செய்ய கட்சி மேலிடம் நெருக்கடி செய்யவில்லை என ராஜிநாமா செய்த பிறகு எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாடை ஆளுநர் மாளிகையில் நேரில் சந்தித்து தனது ராஜிநாமா கடிதத்தை இன்று எடியூரப்பா வழங்கினார்.
இதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எடியூரப்பா கூறியதாவது,
“இரண்டு ஆண்டுகள் முதல்வராக பணியாற்ற வாய்ப்பளித்த மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பதவியேற்ற போது இரண்டு ஆண்டுகளில் ராஜிநாமா செய்வேன் என்று அளிக்கப்பட்ட உறுதியை நிறைவேற்றியுள்ளேன். ராஜிநாமா செய்யும் முடிவை தனது விருப்பப்படி தான் எடுத்துள்ளேன். கட்சி மேலிடம் எந்த நெருக்கடியும் தரவில்லை.
கர்நாடகாவை 17 ஆண்டுகள் ஆட்சி செய்யும் வாய்ப்பு கிடைத்தது. மேலும், பிரதமர் மோடி, அமித்ஷா, நட்டா ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.”
மேலும், ஆளுநராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு, தொடர்ந்து கர்நாடக மக்களின் நலனுக்காக செயல்படவுள்ளதாக பதிலளித்தார்.
2019-ஆம் ஆண்டு ஜூலை 26-ஆம் தேதி நான்காவது முறையாக எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு பதவியேற்றது. இன்றுடன் (ஜூலை 26) முதல்வராக பதவியேற்று 2 ஆண்டுகளை நிறைவடைந்த நிலையில், முதல்வர் பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.
பாஜகவில் 75 வயதைக் கடந்தவா்கள் முக்கிய பதவிகளில் இருந்து விலகியிருக்கும் விதிமுறை உள்ளது. இந்நிலையில், எடியூரப்பாவுக்கு அதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டதை, பலர் எதிர்த்து வந்தனர்.
இதையடுத்து, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் கட்சித் தலைவர் நட்டா உள்ளிட்டோரை கடந்த வாரம் தில்லியில் சந்தித்து பேசிய எடியூரப்பா இந்த முடிவை எடுத்துள்ளார்.