காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியை மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி புதன்கிழமை சந்தித்து பேசினார்.
மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி பாஜகவிற்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். தில்லியில் முகாமிட்டுள்ள அவர் பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்களை சந்தித்து வருகிறார்.
செவ்வாய்க்கிழமை மத்தியப்பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் கமல்நாத்தை சந்தித்துப் பேசிய மம்தா பானர்ஜி காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்த் சர்மாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
முன்னதாக அவர் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவிற்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஓரணியில் இணைய வேண்டும் என தெரிவித்திருந்தார்.
இவற்றுக்கு மத்தியில் புதன்கிழமை காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இந்த சந்திப்பில் காங்கிரஸ் முன்னாள் தலைவரும், மக்களவை உறுப்பினருமான ராகுல்காந்தியும் பங்கேற்றுள்ளார்.
மம்தா பானர்ஜியின் இந்த நடவடிக்கை அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.