நாரதா லஞ்ச வழக்கில் எனது அமைச்சர்களை கைது செய்ததைப் போன்று என்னையும் கைது செய்யுங்கள் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மேலும், நாரதா லஞ்ச வழக்கில் உரிய நடைமுறை இல்லாமல் அமைச்சர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மம்தா குற்றம் சாட்டியுள்ளார்.
மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் அமைச்சா்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் போலி நிறுவனம் ஒன்றின் பிரதிநிதிகளுக்கு சாதகமாக நடப்பதாகக் கூறி அவா்களிடம் லஞ்சமாக பணம் பெறும் காட்சிகள் கடந்த 2016-ஆம் ஆண்டு மாநில சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்பாக வெளியாகின. இதனை ரகசிய நடவடிக்கையாக நாரதா இணையதள செய்தி நிறுவனம் படம்பிடித்தது. இதுதொடா்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில் இந்தக் காட்சிகள் படம்பிடிக்கப்பட்ட போது மாநில அமைச்சா்களாக இருந்த திரிணமூல் காங்கிரஸைச் சோ்ந்த பிர்ஹாத் ஹாத் ஹகீம், சுப்ரதா முகா்ஜி, மதன் மித்ரா, சோவன் சட்டா்ஜி ஆகிய நால்வா் மீது சட்ட நடவடிக்கை எடுக்க சிபிஐக்கு ஆளுநர் அனுமதி அளித்தார்.
இதனைத் தொடர்ந்து பிர்ஹாத் ஹகீம், சுப்ரதா முகா்ஜி ஆகிய இரு அமைச்சர்களுடன் மம்தா பானர்ஜி கொல்கத்தாவிலுள்ள சிபிஐ அலுவலகத்திற்கு விசாரணைக்காக சென்றார்.
சுமார் 45 நிமிடங்களுக்குப் பிறகான விசாரணையில் அமைச்சர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். பின்னர் வெளியே வந்த முதல்வர் மம்தா பானர்ஜி, எனது அமைச்சர்கள்ள் உரிய நடைமுறை இல்லாமல் கைது செய்யப்பட்டுள்ளனர். முடிந்தால் அதுபோன்று என்னையும் கைது செய்யுங்கள் என்று ஆவேசமாகக் கூறினார்.