கர்நாடகத்தில் ஊழல் தடுப்புப் பிரிவினர் மேற்கொண்ட சோதனையில் அரசு அதிகாரி வீட்டில் தண்ணீர் குழாயில் கட்டுக்கட்டாக பணம் இருப்பது கண்டறியப்பட்டது.
இதனை அதிகாரிகள் பக்கெட்டுகள் மூலம் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூ.25 லட்சம் என்று ஊழல் தடுப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கர்நாடகத்தில் 15 அரசு அதிகாரிகள் வீடுகள் உள்பட 60 இடங்களில் ஊழல் தடுப்பு அதிகாரிகள் இன்று (நவ.24) காலை முதல் சோதனை நடத்தினர். இதில் ஏராளமான கணக்கில் வராத சொத்துகள், பணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதில் கர்நாடக பொதுப்பணித் துறையைச் சேர்ந்த அதிகாரி ஷாந்தா கெளடா வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், ஏராளமான நகைகள், பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அவரது வீட்டின் பின்புறம் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் உள்ள தண்ணீர் குழாயில் கட்டுக்கட்டாக பணம் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததையும் அதிகாரிகள் கைப்பற்றினர்.
தண்ணீர் குழாய்களை உடைத்து பக்கெட் மூலம் பணத்தை அதிகாரிககள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு மட்டும் ரூ.25 லட்சம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.