மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை பாஜக மூத்தத் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி தில்லியில் நேரில் சந்தித்து பேசினார்.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், நான் ஏற்கெனவே மம்தா பக்கம்தான் உள்ளேன் என்று சூசகமாக பதிலளித்துச் சென்றார்.
மூன்று நாள்கள் பயணமாக தில்லி சென்றுள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று (நவ.24) மாலை பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்கிறார்.
இந்த சந்திப்பில் மத்திய அரசு மேற்கு வங்கத்திற்குத் தரவேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகை, திரிபுரா கலவரம், எல்லைப் பாதுகாப்புப் படையினருக்கு அதிகாரம் வழங்குவதல் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இதனையொட்டி மேற்கு வங்க முதல்வர் மம்தாவை சுப்பிரமணிய சுவாமி நேரில் சென்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது மேற்கு வங்க ஆளுநரும், தலைமைச் செயலரும் உடன் இருந்தனர். தில்லியில் மம்தா தங்கியிருந்த இல்லத்தில் நேரில் சந்தித்து பேசிய அவர், பின்னர் குழுவாக நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
பின்னர் இந்த சந்திப்பு குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது செய்தியாளர்கள், திரிணமூல் காங்கிரஸில் இணைவதன் முன்னோட்டமான இந்த சந்திப்பு நடைபெற்றதா? என்று கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த சுப்பிரமணிய சுவாமி, நான் ஏற்கெனவே மம்தாவுடன்தான் உள்ளேன் என பதிலளித்துச் சென்றார்.