மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு பிணையில் வெளிவந்த பாஜகவை சேர்ந்த மக்களவை உறுப்பினரான பிரக்யா சிங் தாகூர் மும்பை நீதிமன்றத்தில் இன்று (நவ.24) ஆஜரானார்.
மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் பிரக்யா தாகூர் மீது 4 ஆயிரம் பக்கங்களுக்கு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையின் போது தனக்கு உடல் நலக் கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும், எழுந்து நடக்க முடியாத அளவிற்கு உடலில் பிரச்னை ஏற்பட்டுள்ளதால், நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரியிருந்தார். நீதிமன்றமும் அவருக்கு விலக்கு அளித்தது.
சக்கர நாற்காலியை பயன்படுத்தி வருவதைப்போன்ற பிம்பங்களை பொதுவெளியில் ஏற்படுத்திய அவர், திருமண விழாக்களில் பங்கேற்பது, பெண்களுடன் நடனமாடுவது என்று சமூகவலைதளங்களில் சிக்கினார். மேலும் கடந்த சில நாள்களுக்கு முன்பு அவர் கூடைப்பந்து விளையாடும் விடியோவும் வெளியாகியிருந்தது.
இந்நிலையில், மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு விசாரணை தொடர்பாக மும்பை நீதிமன்றத்தில் இன்று அவர் ஆஜரானார். நீதிமன்றத்திற்கு சர்க்கர நாற்காலியில் வந்த அவர், விசாரணை முடிந்ததும், நேரடியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் என்று நீதிமன்றத்தில் குறிப்பிட்டார்.