பெலகாவி: கர்நாடக மாநிலம் கோகாக் நீர்வீழ்ச்சி குகைப் பகுதிக்கு சுற்றுலாச் சென்ற இளைஞர், செல்ஃபி மோகத்தால், கால் தவறி 140 அடி பள்ளத்தில் விழுந்த போதும், அதிர்ஷ்டவசமாக, சிறிய காயங்களுடன் உயிரோடு மீட்கப்பட்டுள்ளார்.
செல்ஃபி மோகத்தால் பள்ளத்தில் விழுந்து உயிரோடு மீட்கப்பட்டவர் கர்நாடக மாநிலம் கலாபுர்கி மாவட்டம் ஜேவர்கியைச் சேர்ந்த பிரதீப் சாகர் (30) என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது.
சமூக ஆர்வலர் அயூப் கான் முயற்சியால், காவல்துறை உதவியோடு மீட்கப்பட்ட பிரதீப் சாகருக்கு லேசான காயங்கள் தான் உள்ளன. ஆனால், அவர் கீழே விழுந்ததில் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார். அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சைக்கு அவரது உடல் ஒத்துழைப்பு அளிப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்கலாமே..தமிழகத்தில் வெளிச்சத்துக்கு வந்தது சுங்கக் கட்டண மோசடி
இது குறித்து காவல்துறை தரப்பில் கூறப்படுவது என்னவென்றால், கர்நாடக மாநிலத்தில் உள்ள கர்நாடகத்தின் நயாக்ரா என்றடைக்கப்படும் கோகாக் நீர்வீழ்ச்சிக்கு கடந்த சனிக்கிழமை தனது 5 நண்பர்களுடன் சென்ற சாகர், அங்கு பார்வையாளர் மாடத்தின் மீது ஏறி நின்று செல்ஃபி எடுக்க முயன்ற போது, கால் தவறி 140 அடி பள்ளத்தில் விழுந்துள்ளார்.
காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டு, சனிக்கிழமை நள்ளிரவு வரை தேடியுள்ளனர். ஆனால் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்ல. அதே வேளையில், அவரது செல்லிடப்பேசி மட்டும் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருந்தது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணிக்கு, சாகர் தனது செல்லிடப்பேசியிலிருந்து நண்பரை அழைத்தள்ளார். அவர் எங்கிருக்கிறார் என்று காவல்துறைக்கு தகவல் அளித்ததன் மூலம், அவர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். அதிர்ஷ்டவசமாக, அவர் விழுந்த இடத்திலேயே செல்லிடப்பேசியும் விழுந்ததால், அவர் உடனடியாக மீட்கப்பட்டுள்ளார்.