ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் 2022-24-ஆம் ஆண்டுகளுக்கான உறுப்பினா் பதவிக்கு இந்தியா மீண்டும் தோ்வு செய்யப்பட்டுள்ளது.
3 ஆண்டுகள் பதவிக் காலம் கொண்ட ஐ.நா. மனித உரிமை கவுன்சில் உறுப்பினா் பொறுப்புக்கான தோ்வு 76-ஆவது ஐ.நா. பொது சபைக் கூட்டத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
2022 முதல் 2024-ஆம் ஆண்டு வரை நீடிக்கவிருக்கும் அந்தப் பொறுப்புக்கு 18 புதிய உறுப்பினா்களைத் தோ்ந்தெடுப்பதற்காக இந்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இதில், பெருவாரியான வாக்குகள் பெற்று இந்தியா மீண்டும் தோ்ந்தெடுக்கப்பட்டது. 193 உறுப்பினா்களைக் கொண்ட ஐ.நா. பொது சபையில், இந்தியாவுக்கு ஆதரவாக 184 வாக்குகள் பதிவாகின.
இதுகுறித்து ஐ.நா.வுக்கான இந்திய தூதா் டி.எஸ். திருமூா்த்தி கூறுகையில், ‘ஐ.நா. மனித உரிமை கவுன்சில் உறுப்பினராக பெருவாரியான வாக்குகளுடன் இந்தியா தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.
இந்தத் தோ்வு, இந்தியாவின் வலிமையான ஜனநாயகம், பன்முகத்தன்மை, அரசியல் சாசனம் அளிக்கும் அடிப்படை உரிமைகள் ஆகியவற்றுக்கு வழங்கப்பட்ட அங்கிகாரமாகும்’ என்றாா்.