உத்தரப் பிரதேசத்தில் போலீஸ் காவலில் பலியான தூய்மைப் பணியாளரின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறச் சென்ற காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியின் கார் காவல்துறையால் தடுத்து நிறுத்தப்பட்டது.
ஆக்ரா அருகே கடந்த அக்.17ஆம் தேதி தூய்மைப் பணியாளர் ஒருவரை ரூ. 25 லட்சம் திருடுப் போன வழக்கில் காவல்துறையினர் கைது செய்தனர். விசாரணையில், தான் திருடியதை அவர் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து அவரது வீட்டை சோதனை செய்ததில் ரூ. 15 லட்சம் கைப்பற்றப்பட்டது. அப்போது தூய்மைப் பணியாளருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
போலீஸ் காவலில் தூய்மைப் பணியாளரை காவலர்கள் அடித்ததால் தான் உயிரிழந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், உயிரிழந்த தூய்மைப் பணியாளர்களின் குடும்பத்தினரை பார்த்து ஆறுதல் கூறுவதற்காக சென்ற பிரியங்கா காந்தியின் வாகன அணிவகுப்பையும் அவரையும் உ.பி. காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பிரியங்கா பேசுகையில்,
“காவல்துறையினர் என்னை ஆக்ரா செல்லக்கூடாது எனத் தடுத்துள்ளார்கள். நான் எங்கு சென்றாலும் தடுத்து நிறுத்துகின்றனர். அவர்களின் அரசியல் வசதிக்காக நான் உணவகத்தில் உட்கார வேண்டுமா? நான் அவர்களைச் சந்திக்க விரும்புகிறேன், இதில் என்ன பெரிய பிரச்னை உள்ளது?
நான் அலுவலகத்தை தவிர வேறு எங்கு சென்றாலும் தடுக்கின்றனர். இது மக்களுக்கு தான் இடையூறாக உள்ளது.”