
தற்கொலைக்கு முயன்ற நபர்: முகநூல் உதவியுடன் காப்பாற்றிய தில்லி காவல்துறை
தில்லியில் தற்கொலைக்கு முயன்ற நபரை முகநூல் உதவியுடன் காவல்துறையினர் கண்டுபிடித்து காப்பாற்றியுள்ளனர்.
தில்லியில் 43 வயதான நபர் ஒருவர் அதீத மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துகொள்வதாக தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதையும் படிக்க | பிரதமர் மோடியுடன் தமிழக ஆளுநர் நாளை (அக்.23) சந்திப்பு
இதனை அறிந்த சக முகநூல் பயனர்கள் இதுகுறித்த தகவலை தில்லி சைபர் குற்றம் தடுப்புப்பிரிவுக்கு தெரிவித்துள்ளனர். உடனடியாக விரைந்து செயல்பட்ட காவல்துறையினர் முகநூல் உதவியுடன் அவர் இருக்கும் இடத்தை தேட ஆரம்பித்தனர். காவல்துறையின் தீவிர முயற்சிக்குப் பின் தற்கொலைக்கு முயன்ற நபர் ராஜெளரி கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் எனக் கண்டறியப்பட்டது.
உடனடியாக சைபர் குற்றம் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் அப்பகுதி காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையும் படிக்க | ‘95 சதவிகித மக்களுக்கு பாஜக தேவையில்லை’: அகிலேஷ் யாதவ்
அதனைத் தொடர்ந்து அவரது குடியிருப்புக்கு சென்ற காவல் அதிகாரிகள் மயக்க நிலையில் இருந்த அவரை மீட்டு தீன் தயாள் உபாத்யயா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
கடும் மன அழுத்தம் காரணமாக தைராய்டு சிகிச்சைக்கான மருந்துகளை அளவுக்கதிகமாக உட்கொண்டு அவர் தற்கொலைக்கு முயன்றுள்ளது மருத்துவப் பரிசோதனையில் தெரிய வந்தது.
தற்கொலைக்கு முயன்ற நபரை முகநூல் மூலம் அறிந்து விரைந்து செயல்பட்ட காவல்துறைக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.