இந்தியாவிற்கு எதிரான 20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றதைக் கொண்டாடியவர்களை சிறையிலடைக்க வேண்டும் என ஜம்மி-காஷ்மீர் பாஜக தலைவர் சர்ச்சைக் கருத்து தெரிவித்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த பாகிஸ்தானுக்கு எதிராக 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி படுதோல்வியடைந்தது. அதனைத் தொடர்ந்து இந்த போட்டி குறித்து பல்வேறு சர்ச்சைக் கருத்துகளும் உலவத் தொடங்கின.
இந்நிலையில் ஜம்மு-காஷ்மீர் பாஜக தலைவரான ரவீந்தர் ரெய்னா பாகிஸ்தான் வெற்றியக் கொண்டாடியவர்களை சிறையிலடைக்க வேண்டும் என தெரிவித்துள்ள கருத்து தற்போது விவாதமாகியுள்ளது.
காஷ்மீரிகள் தங்களது நட்பு நாட்டின் வெற்றியைக் கொண்டாடுவதாக எழுந்த விமரிசனத்திற்கு பதிலளித்த ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி பாகிஸ்தான் வெற்றியைக் கொண்டாடியது விளையாட்டில் நல்ல போக்கு எனத் தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளித்துள்ள ஜம்மு காஷ்மீர் பாஜக தலைவர் ரவீந்தர் ரெய்னா, “சில தலைவர்களுக்கு நாள் முழுவதும் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பிற்கு தேவைப்பட்டாலும் அவர்களின் இதயம் பாகிஸ்தானுக்காக துடிக்கிறது.எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க | மக்களிடமிருந்து பாஜக கொள்ளையடிப்பதாக அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு
மேலும் மெகபூபா முப்தி தலிபான் கொள்கையைப் பின்பற்றுவதாக தெரிவித்த ரவீந்தர் ரெய்னா இந்தியாவிற்கு எதிராக ஆயுதமேந்திய தீவிரவாதிகளை ஊக்குவிக்கும் நமது எதிரிநாட்டிற்கு ஆதரவளிப்பவர்கள் மக்களுக்கு பதிலளிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
இந்தியா-பாகிஸ்தான் இடையேயான விளையாட்டுப் போட்டியைக் குறித்து தொடர்ச்சியாக சர்ச்சைக் கருத்துகள் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.