நாட்டில் கரோனா கட்டுப்பாடுகளால் 25% உணவகங்கள் மூடப்பட்டுள்ளதாகவும் சுமார் 24 லட்சம் பேர் வேலையிழந்துள்ளதாகவும் இந்திய தேசிய உணவக சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
கரோனா தொற்றுப் பரவலால் அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கத்தினால் பல துறைகள் சரிந்துள்ளன. வேலை ஆள்கள் குறைப்பு, சம்பளம் குறைப்பு என பல நடவடிக்கைகளும் இன்னும் இருந்து வருகின்றன. எனினும் பெரும்பாலான நிறுவனங்கள் படிப்படியாக இயல்பு நிலைக்குத் திரும்பி வருகின்றன.
இந்நிலையில் கரோனா, இந்திய உணவு சேவைத் துறையின் முதுகெலும்பை உடைத்துவிட்டதாகக் கூறியுள்ள அறிக்கை, நான்கில் ஒரு பங்கு உணவகங்கள் முடங்கியுள்ளதாகவும் இதனால் 24 லட்சம் பேர் வேலை இழந்ததாகவும் கூறுகிறது.
ஒரு ஆண்டுக்கு முன்னதாக இந்திய உணவு சேவைத் துறையின் அளவு ரூ.4.23 லட்சம் கோடியாக இருந்த நிலையில் 53% குறைந்து 2020-21 நிதியாண்டில் ரூ.2 லட்சம் கோடியாகக் குறைந்துள்ளது.
இதையும் படிக்க | மார்பகப் புற்றுநோயாளிகள் நட்ஸ் சாப்பிடுவதால்...
இதில் தில்லி மற்றும் மும்பை நகரங்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. மக்கள்தொகை மற்றும் பொருளாதார நடவடிக்கை காரணமாக இந்த இரு நகரங்களிலும் உணவு சேவைத் துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. அதேபோன்று பெங்களூரு, கேரளத்திலும் பிரபல உணவகங்கள் பல மூடப்பட்டுள்ளன.
உலக அளவில் உணவு சேவைத் துறை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன் சிறு நிறுவனங்களே இவற்றில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. சுகாதாரம், பாதுகாப்பு பிரச்னைகள் மற்றும் மூலதனம் பற்றாக்குறை காரணமாக சிறு வணிகர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிக்கை கூறுகிறது.
அதேநேரத்தில், ஆன்லைனில் ஆர்டர் செய்யும் நடைமுறை 13% லிருந்து 33% ஆக அதிகரித்துள்ளது. சராசரி ஆர்டர் விலையும் 43% உயர்ந்துள்ளது.
தற்போது கரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருவதால் சுமார் 73 லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும் என்றும் 2021-22 நிதியாண்டில் சந்தை மதிப்பு 4.72 லட்சம் கோடியைத் தொடும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் இந்திய தேசிய உணவக சங்கம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க | வாரத்திற்கு 5 மணிநேரமாவது உடற்பயிற்சி செய்யுங்கள்!