பெகாஸஸ் விவகாரத்தை விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

பெகாஸஸ் ஒட்டுக்கேட்பு விவகாரத்தை சிறப்பு வல்லுநர்கள் குழுக் கொண்டு விசாரிக்க உச்சநீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.
உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

பெகாஸஸ் ஒட்டுக்கேட்பு விவகாரத்தை சிறப்பு வல்லுநர்கள் குழுக் கொண்டு விசாரிக்க உச்சநீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.

இஸ்ரேலை சோ்ந்த என்எஸ்ஓ நிறுவனம் உருவாக்கிய பெகாஸஸ் உளவு மென்பொருளைப் பயன்படுத்தி இந்தியாவில் எதிா்க்கட்சியினா், சமூக ஆா்வலா்கள், பத்திரிகையாளா்கள் உள்ளிட்ட சுமாா் 300 பேரின் கைப்பேசிகள் உளவு பாா்க்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த விவகாரம் தொடா்பாக சுதந்திரமான விசாரணை நடத்துவதற்குத் தனிக் குழுவை நியமிக்கக் கோரி மூத்த பத்திரிகையாளா் என்.ராம் உள்ளிட்டோா் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த விவகாரம் தொடா்பான பிரமாணப் பத்திரத்தை மத்திய அரசு தாக்கல் செய்திருந்தது.

தேசப் பாதுகாப்பு தொடா்பான விவகாரங்கள் இடம்பெற்றுள்ளதால், இந்த வழக்கில் விரிவான பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்ய விரும்பவில்லை என்றும், இந்தக் குற்றச்சாட்டை விசாரிக்க தனிக் குழுவை அமைக்கத் தயாராக உள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்திருந்தது. பெகாஸஸ் விவகாரத்தில் எதையும் மறைக்கவில்லை என்றும் மத்திய அரசு நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.

தேசப் பாதுகாப்பு தொடா்பான விவகாரங்களில் தலையிட விரும்பவில்லை எனத் தெரிவித்த உச்சநீதிமன்றம், பெகாஸஸ் மென்பொருளை அரசு சட்டவிரோதமாகப் பயன்படுத்தியதா என்பதை மட்டுமே அறிய விரும்புவதாகவும் தெரிவித்திருந்தது.

பெகாஸஸ் மென்பொருள் வாயிலாக உளவு பாா்க்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க தொழில்நுட்ப நிபுணா்களைக் கொண்ட குழு அமைக்கப்படும் என்றும் உச்சநீதிமன்றம் ஏற்கெனவே தெரிவித்திருந்தது.

இந்த வழக்கில் இன்று உத்தரவிட்டு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பேசுகையில்,

“நாம் தகவல் தொழில்நுட்பக் காலத்தில் வாழ்ந்து கொண்டுள்ளோம். பெகாஸஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் மிகவும் முக்கியமானவை. பத்திரிகையாளர்கள் மட்டுமின்றி அனைத்து இந்திய குடிமக்களின் தனி நபர் ரகசியங்களும் காக்கப்பட வேண்டும். தொழில்நுட்பம் எந்த அளவிற்கு முக்கியமோ அதே அளவிற்கு தனிமனித உரிமையும் முக்கியம் என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

ஆகையால், பெகாஸஸ் ஒட்டுக்கேட்பு விவகாரத்தை சிறப்பு வல்லுநர்கள் கொண்ட குழு விசாரிக்க உத்தரவிடப்படுகிறது. இந்த விசாரணையை உச்சநீதிமன்றடம் கண்காணிக்கும்.

இந்தக் குழுவானது ஒய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஆர்.வி.ரவிந்தீரன் தலைமையில் இயங்கும். குழுவில், உளவுப்பிரிவின் முன்னாள் இயக்குநர் அலோக்ஜோஷி, தொழில்நுட்ப வல்லுநர் சந்தீப் ஒபராய் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

மேலும், குற்றச்சாட்டுகளை முழுமையாக ஆராய்ந்து 8 வாரங்களுக்குள் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்படுகிறது.”

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com