அடுத்த பத்தாண்டுகளுக்கு பாஜக எங்கும் செல்லாது என்றும் ராகுல் காந்தியிடம் உள்ள பிரச்னையே அவர் இதை உணராமல் இருப்பதுதான் என்றும் தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். கோவாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், ராகுல் காந்தி குறித்து பல கருத்துகளை பகிர்ந்து கொண்டார்.
அவர் கூறியுள்ள கருத்துகளின் மூலம், காங்கிரஸ் கட்சியில் சேர்வதற்காக அவர் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியை தழுவியிருப்பது தெரியவந்துள்ளது. கேள்வி பதில் அமர்வின் போது பிரசாந்த கிஷோர் கூறிய கருத்துகள் விடியோவாக சமூக வலைதளங்களில் வெளியானது. சுதந்திரம் பெற்ற முதல் 40 ஆண்டுகளில் காங்கிரஸ் எப்படி இருந்ததோ அதேபோல, வரவிருக்கும் ஆண்டுகளில் இந்திய அரசியலின் மையப்புள்ளியாக பாஜகவே திகழும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "சுதந்திரம் பெற்ற முதல் 40 ஆண்டுகளில் காங்கிரஸ் எப்படி இருந்ததோ, அதேபோல இந்திய அரசியலின் மையப்புள்ளியாக பாஜக இருக்கப் போகிறது. வெற்றி பெற்றாலும், தோல்வி அடைந்தாலும் பாஜக எங்கும் செல்ல போவதில்லை. இந்திய அளவில் 30 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுவிட்டால், அக்கட்சியை உடனடியாக அப்புறப்படுத்த முடியாது.
எனவே, மக்கள் கோபமடைந்து (பிரதமர் நரேந்திர) மோடியை தூக்கி எறிவார்கள் என சொல்லப்படும் வலையில் ஒருபோதும் சிக்க வேண்டாம். ஒருவேளை மோடியை தூக்கி எறியலாம். ஆனால், பாஜக எங்கும் செல்லாது. அவர்கள் இங்கேதான் இருக்கப் போகிறார்கள், அடுத்த பல பத்தாண்டுகளுக்கு அவர்கள் இங்குதான் போராட போகிறார்கள். பாஜக எங்கும் சென்றுவிடாது.
இதுதான் ராகுல் காந்தியின் பிரச்னையே. மக்கள் (மோடி) அவரை தூக்கி எறிந்து விடுவார்கள் என்று அவர் நினைக்கிறார். அது நடக்காது. (பிரதமர் மோடியின்) பலத்தை நீங்கள் ஆராய்ந்து, புரிந்து கொண்டு, அறிந்து கொள்ளாதவரை, அவரைத் தோற்கடிக்க உங்களால் ஒரு போதும் எதிர்முனை ஆற்ற முடியாது" என்றார்.