மேற்கு வங்க இடைத்தேர்தல் நடைபெறவுள்ள பவானிபூர் தொகுதியில் பாஜக மூத்த தலைவர் சுவேந்து அதிகாரி தனது பிரசாரத்தை திங்கள்கிழமை தொடங்கியுள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தின் பவானிபூர், ஜாங்கிபூர் மற்றும் சாம்செர்காஞ்ச் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வரும் செப்-30 ஆம் தேதி நடைபெறும் எனவும் வாக்கு எண்ணிக்கை அக்-3 ஆம் தேதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பவானிபூர் தொகுதியில் மம்தா பானர்ஜி போட்டியிடுவார் என திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் அறிவித்திருந்தது.
இதற்கிடையே நேற்று நாடியா பகுதியில் சுவேந்து அதிகாரி பேசியது:
நந்திகிராம் தொகுதியில் உங்களை யார் போட்டியிட சொன்னது? எனது கட்சி கேட்டுக்கொண்டு நான் பவானிபூர் தொகுதியில் போட்டியிட்டால் என்ன நடக்கும்? ஏற்கனவே 1956 வாக்குகள் வித்தியாசத்தில் மம்தாவை வீழ்த்தியுள்ளேன் என்றார்.
மேற்கு வங்க மாநிலத்தின் முதல்வர் மம்தா பானர்ஜி கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்டு தன் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த சுவேந்து அதிகாரியிடம் தோல்வியடைந்தார். பின் தன் தோல்வியில் சந்தேகம் இருப்பதாகக் கூறி நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.