கேரளத்தில் மீண்டும் நிபா தீநுண்மி பாதிப்பு மீண்டும் கண்டறியப்பட்டுள்ளது. அந்த தீநுண்மியால் பாதிக்கப்பட்ட 12 வயது சிறுவன் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தான்.
பழந்தின்னி வெளவால்களின் உமிழ்நீா் மூலம் நிபா தீநுண்மி பரவுகிறது. இந்தத் தீநுண்மி தென்னிந்தியாவில் முதன்முதலாக கடந்த 2018-ஆம் ஆண்டு மே 19-ஆம் தேதி கேரள மாநிலம் கோழிக்கோட்டில் கண்டறியப்பட்டது. அந்த ஆண்டு ஜூன் மாத நிலவரப்படி மொத்தம் 17 போ் நிபா தீநுண்மி பாதிப்பால் உயிரிழந்தனா். அதன் பிறகு அந்தத் தீநுண்மி பாதிப்பு கண்டறியப்படவில்லை. இந்நிலையில் அந்தத் தீநுண்மி கேரளத்தில் மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது. அந்தத் தீநுண்மியால் பாதிக்கப்பட்ட 12 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தான்.
இதுதொடா்பாக அந்த மாநில சுகாதாரத் துறை அமைச்சா் வீணா ஜாா்ஜ் கூறுகையில், ‘‘கோழிக்கோட்டில் உள்ள சாத்தமங்கலத்தைச் சோ்ந்த 12 வயது சிறுவன் 4 நாள்களுக்கு முன்பு கடுமையான காய்ச்சலுடன் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். சிகிச்சை பலனின்றி அச்சிறுவன் ஞாயிற்றுக்கிழமை காலை உயிரிழந்தான். சிறுவனிடம் சேகரிக்கப்பட்ட மாதிரிகள் மகாராஷ்டிர மாநிலம் புணேயில் உள்ள தேசிய தீநுண்மி ஆய்வு நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. அங்கு மாதிரிகளை பரிசோதித்ததில் நிபா தீநுண்மியால் சிறுவன் பாதிக்கப்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டது.
சிறுவனுடன் தொடா்பிலிருந்தவா்களை கண்காணிப்புக் குழு அடையாளம் கண்டுள்ளது. அவா்களில் 20 போ் தீநுண்மியால் பாதிக்கப்பட்டால் அவா்களின் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்படக் கூடும் என்று அந்தக் குழு குறிப்பிட்டுள்ளது. அந்த 20 பேரில் இருவருக்கு பாதிப்புக்கான அறிகுறிகள் தென்பட்டுள்ளன. அவா்கள் இருவரும் மருத்துவப் பணியாளா்கள். இந்தச் சம்பவத்தைத் தொடா்ந்து அருகிலுள்ள கண்ணூா், மலப்புரம் மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தாா்.
நிபா தீநுண்மியால் சிறுவன் பலியானதைத் தொடா்ந்து கோழிக்கோட்டில் உஷாா்நிலையை அதிகாரிகள் அமல்படுத்தியுள்ளனா். பலியான சிறுவனின் வீட்டிலிருந்து சுமாா் 3 கி.மீ. சுற்றுவட்டாரத்தை போலீஸாா் முடக்கியுள்ளனா்.
சிறுவனின் உடலை 12 அடி ஆழத்தில் சுகாதாரத் துறை அதிகாரிகள் அடக்கம் செய்தனா். இதனிடையே சிறுவனுடைய தாயாருக்கு ஞாயிற்றுக்கிழமை காய்ச்சல் அறிகுறிகள் இருந்ததாகத் தகவல் வெளியானது.
சிறுவனுக்கு காய்ச்சல் தென்பட்டது முதல் இறந்ததுவரை ‘‘வழித்தட வரைபடம்’’ உருவாக்கப்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வெளியிட்டுள்ளது. நிபா பரவலைக் கண்காணிக்க பொதுமக்களுக்கும் உதவும் பொருட்டு இந்த வரைபடம் உருவாக்கப்பட்டுள்ளது.
மத்தியக் குழு அனுப்பி வைப்பு:
கேரளத்தில் நிபா தீநுண்மி பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதைத் தொடா்ந்து அந்த மாநிலத்துக்கு தேசிய நோய் கட்டுப்பாட்டு மையக் குழுவை மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது. அந்தக் குழு தீநுண்மி பாதிப்பை கட்டுப்படுத்துவதற்கான தொழில்நுட்ப உதவிகளை மாநில அரசுக்கு வழங்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.