
பஞ்சாபின் புதிய முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி நாளை காலை 11 மணிக்கு பதவியேற்கிறார். முன்னதாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்த அவர் இந்த தகவலை தெரிவித்தார்.
பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் தனது முதல்வர் பதவியை சனிக்கிழமை ராஜிநாமா செய்தார். இதைத் தொடர்ந்து, பஞ்சாபின் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி பரவலாக எழுந்தது. இதனால், பஞ்சாப் அரசியல் சூழல் பரபரப்பாக இருந்தது.
இந்த நிலையில் பஞ்சாப் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில் புதிய முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார். இதுபற்றிய அறிவிப்பை ஹரீஷ் ராவத் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்நிலிலையில், பஞ்சாப்பின் புதிய முதல்வராக தேர்வுசெய்யப்பட்ட சரண்ஜித் சிங் சன்னிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க- பஞ்சாப் முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி தேர்வு
இதுகுறித்து அவர் தனது சுட்டுரையில், புதிய பொறுப்புக்கு வந்திருக்கும் சரண்ஜித் சிங் சன்னி ஜிக்கு வாழ்த்துக்கள். பஞ்சாப் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நாம் தொடர்ந்து நிறைவேற்ற வேண்டும். அவர்களின் நம்பிக்கை மிக முக்கியமானது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.