பஞ்சாப் காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழுத் தலைவராக சரண்ஜித் சிங் சன்னி ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவரும், பஞ்சாப் காங்கிரஸ் பொறுப்பாளருமான ஹரீஷ் ராவத் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் தனது முதல்வர் பதவியை சனிக்கிழமை ராஜிநாமா செய்தார். இதைத் தொடர்ந்து, பஞ்சாபின் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி பரவலாக எழுந்தது. இதனால், பஞ்சாப் அரசியல் சூழல் பரபரப்பாக இருந்தது.
இந்த நிலையில் பஞ்சாப் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில் புதிய முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார். இதுபற்றிய அறிவிப்பை ஹரீஷ் ராவத் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
சரண்ஜித் சிங் சன்னி புதிய முதல்வராக அறிவிக்கப்பட்டது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் சுக்ஜிந்தர் சிங் ரந்தாவா கூறுகையில், "இது கட்சி மேலிடத்தின் முடிவு. இதை நான் வரவேற்கிறேன். சன்னி எனது இளைய சகோதரரைப் போல. அதனால், நான் ஏமாற்றமடையவில்லை." என்றார்.