பஞ்சாபில் நடைபெறும் அதிரடி அரசியல் திருப்பங்கள்

பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக நவ்ஜோத் சிங் சித்து தொடர்வார் என அவரின் ஆலோசகர் முகமது முஸ்தபா குறிப்பிட்டிருந்தார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பொறுப்பை நவ்ஜோத் சிங் சித்து செவ்வாய்கிழமை ராஜிநாமா செய்தார். இதையடுத்து, அவரை சமாதானப்படுத்த காங்கிரஸ் சார்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில், அம்மாநில முதலமைச்சர் சரண்ஜீத் சிங் சன்னியை சந்திக்க ஒப்புக் கொண்டுள்ளதாக சித்து இன்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக நவ்ஜோத் சிங் சித்து தொடர்வார்; அடுத்தாண்டு தேர்தலில் கட்சியை முன்னின்று வழிநடத்துவார் என அவரின் ஆலோசகர் முகமது முஸ்தபா குறிப்பிட்டிருந்தார். இதன் காரணமாக, அவர் ராஜிநாமாவை திரும்பபெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதலமைச்சருடனான சந்திப்பு குறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில், "பேச்சுவார்த்தையில் ஈடுபட முதலமைச்சர் எனக்கு அழைப்பு விடுத்துள்ளார். அவரின் வேண்டுகோளுக்கிணங்க, சண்டிகரில் உள்ள பஞ்சாப் பவானுக்கு இன்று மதியம் 3:00 மணிக்கு செல்லவுள்ளேன். எந்தவொரு விவாதத்திற்கும் அவர் வரவேற்கப்படுகிறார்" என பதிவிட்டுள்ளார்.

புதிய அமைச்சரவை அமைக்கும்போது, சித்துவுடன் ஆலோசனை மேற்கொள்ளப்படாததால் அவர் அதிருப்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, கட்சி மேலிடத்திடம் தகவல் தெரிவிக்காமலேயே தலைவர் பதவியிலிருந்து சித்து விலகினார். 

அதுமட்டுமன்றி, அரசு அமைப்புகளில் மேற்கொள்ளப்பட்ட நியமனங்களில் ஊழல் வழக்கில் சிக்கியவர்களுக்கு பதவி வழங்கப்பட்டிருப்பதாலும் தன்னுடைய அரசியல் எதிரிகளுக்கு பொறுப்பு அளிக்கப்பட்டிருப்பதாலும் சித்து அதிருப்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com