பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பொறுப்பிலிருந்து நவ்ஜோத் சிங் திங்கள்கிழமை விலகினார். இந்நிலையில், அவரை சமாதானம் செய்யும் வகையில் பஞ்சாப் முதலமைச்சர் சரண்ஜீத் சிங் சன்னி அழைப்பு விடுத்துள்ளார்.
சித்துவுடன் தொலைப்பேசியில் பேசியதை செய்தியாளர்களிடம் விவரித்த அவர், "இங்கு எதுவும் உள்நோக்கத்துடன் செய்யப்படவில்லை. அரசு அமைப்புகளில் மேற்கொள்ளப்பட்ட நியமனங்களில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால், நான் அதில் பிடிவாதமாக இருக்க மாட்டேன். எனக்கு அகங்காரம் எல்லாம் இல்லை. கட்சிதான் முக்கியம். பிரச்னையை பேசி தீர்த்து கொள்வோம் என அவரிடம் கூறினேன்" என்றார்.
புதிய அமைச்சரவை அமைக்கும்போது, சித்துவுடன் ஆலோசனை மேற்கொள்ளப்படாததால் அவர் அதிருப்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, கட்சி மேலிடத்திடம் தகவல் தெரிவிக்காமலேயே தலைவர் பதவியிலிருந்து சித்து விலகினார்.
அதுமட்டுமன்றி, அரசு அமைப்புகளில் மேற்கொள்ளப்பட்ட நியமனங்களில் ஊழல் வழக்கில் சிக்கியவர்களுக்கு பதவி வழங்கப்பட்டிருப்பதாலும் தன்னுடைய அரசியல் எதிரிகளுக்கு பொறுப்பு அளிக்கப்பட்டிருப்பதாலும் சித்து அதிருப்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இதையும் படிக்க | பஞ்சாபில் தொடரும் குழப்பம்: இன்று கூடுகிறது அமைச்சரவை
தலைவர் பதவியை ராஜிநாமா செய்திருப்பது குறித்து தான் வெளியிட்ட விடியோவில் விளக்கம் அளித்துள்ள அவர், "கொள்கைகளுக்கு ஏற்ப நான் எந்த தியாகத்தையும் செய்வேன். கறைபடிந்த அமைச்சர்கள் மற்றும் அலுவலர்கள் உள்ள அமைப்பை உடைத்தேன். இப்போது கறைபடிந்த அமைச்சர்கள் மற்றும் அலுவலர்களை மீண்டும் நியமிப்பதை ஏற்க முடியாது. இத்தகைய நியமனங்களை நான் எதிர்க்கிறேன்" என்றார்.