தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலும் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானும் குஜாரத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்துக்கு சென்றனர்.
தில்லியைத் தொடர்ந்து பஞ்சாபைக் கைப்பற்றியுள்ள ஆம் ஆத்மி கட்சி அடுத்து வரவுள்ள மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் கவனம் செலுத்தி வருகிறது.
அந்தவகையில், இந்த ஆண்டு இறுதியில் குஜாரத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது.
தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் மற்றும் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆகியோர் சனிக்கிழமை குஜராத் வந்தனர்.
ஆமதாபாதத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்திற்குச் சென்ற அவர்கள் மகாத்மா காந்திக்கு மரியாதையை செலுத்தியதுடன் ராட்டை சுற்றினர். 'இந்த இடத்தில் இருப்பது நன்றாக இருக்கிறது. வித்தியாசமான உணர்வைத் தருகிறது. பஞ்சாபில் ஒவ்வொரு வீட்டிலும் ராட்டை இருக்கிறது. நாங்கள் காந்திஜியுடன் இணக்கமாக இருக்கிறோம்' என்று பகவந்த் மான் கூறினார்.
அதேநேரத்தில் அரவிந்த் கேஜரிவாலிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு 'இது அரசியல் பேசுவதற்கான இடமல்ல' என்று கூறினார்.
குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 182 இடங்களிலும் தனித்துப் போட்டியிடும் என்று அறிவித்துள்ளது. பஞ்சாபில் மாபெரும் வெற்றி பெற்றதை அடுத்து பாஜகவின் கோட்டையான குஜராத்தைக் கைப்பற்ற ஆம் ஆத்மி அனைத்து வியூகங்களை வகுத்து வருவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.