உத்தரப் பிரதேச சட்ட மேலவைத் தோ்தலில் முதல்வர் யோகி ஆதித்யநாத் வாக்களித்தார்.
மாநிலங்களவைத்தோ்தல் போலவே சட்ட மேலவையிலும் 6 ஆண்டுகள் பதவிக்காலத்தில், 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் காலியாகும் இடங்களுக்கு தோ்தல் நடைபெறுவது வழக்கம்.
உத்தரப் பிரதேச மாநில சட்ட மேலவையில் காலியாக உள்ள 36 இடங்களுக்கான தோ்தல் இன்று(ஏப்ரல் 9) நடைபெறுகிறது. காலை 7 மணிக்குத் தொடங்கி வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
இதையொட்டி, முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று காலையிலேயே கோரக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் தன்னுடைய வாக்கினை பதிவு செய்தார்.
மொத்தம் 100 உறுப்பினா்களைக் கொண்ட உத்தர பிரதேச சட்ட மேலவையில் தற்போது பாஜகவுக்கு 35 எம்எல்சிக்கள் (சட்ட மேலவை உறுப்பினா்கள்) சமாஜவாதிக்கு 17 மற்றும் பகுஜன் சமாஜுக்கு 4 உறுப்பினா்கள் உள்ளனா். காங்கிரஸ், அப்னா தளம் (சோனேலால்), நிஷாத் கட்சிக்கு தலா ஒரு உறுப்பினரும், ஆசிரியா் குழுவில் இரு எம்எல்சி-க்களும், சுயேச்சைக் குழு மற்றும் சுயேச்சை எம்எல்சி தலா ஒருவரும் உள்ளனா்.