தில்லி, ஆந்திரத்தைத் தொடர்ந்து கர்நாடக மாநிலம் ஹூப்ளி பகுதியிலும் அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தின்போது கலவரம் ஏற்பட்டதால், அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிப்பிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகத்தின் பல்வேறு பகுதிகளில் அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தின்போது கற்களை வீசித் தாக்குதல் நடத்தியதாக இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது.
கர்நாடக மாநிலம் ஹூப்ளி அருகே உள்ள காவல் நிலையம் அருகே இருதரப்பினர் கற்களை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இது தொடர்பாக வந்த புகாரின் அடிப்படையில் 40 பேரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மேலும், மோதல் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் ஹூப்ளி பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பித்து காவல் துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
தில்லி ஜஹாங்கீர்பூர் பகுதியிலும், ஆந்திரத்தில் கர்னூர் மாவட்டத்திலுள்ள அல்லூர் பகுதியிலும் அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தின்போது கலவரம் ஏற்பட்டது.