அசாம் மாநில காங்கிரஸ் தலைவர்கள் பாஜகவுடன் நெருக்கமான தொடர்பில் இருப்பதாக முன்னாள் காங்கிரஸ் தலைவர் ரிபுன் போரா குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்.
வடகிழக்கு மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரும், அசாம் மாநிலத்தின் முன்னாள் தலைவருமான ரிபுன் போரா நேற்று காங்கிரஸிலிருந்து விலகி திரிணமூல் காங்கிரஸின் இணைந்தார்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு ரிபுன் போரா எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது:
“கடந்த 2016ஆம் ஆண்டு மாநிலத் தலைவராக பொறுப்பேற்றதில் இருந்து உள்ளாட்சி முதல் சட்டப்பேரவைத் தேர்தல் வரை அனைத்து தேர்தல்களிலும் பாஜகவிற்கு காங்கிரஸ் சவாலாக இருந்தது. 2021 பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றும் என்று மக்கள் எதிர்பார்த்தார்கள்.
ஆனால், அசாம் காங்கிரஸ் கமிட்டியை சேர்ந்த ஒருபகுதி மூத்த தலைவர்களுக்குள் ஏற்பட்ட உள்கட்சி பூசலால் கட்சியின் மீதுள்ள நம்பிக்கையை மக்கள் இழந்தனர்.
மேலும், கடந்த 6 ஆண்டுகளாக மாநிலங்களவை உறுப்பினர்களாக நாட்டின் முக்கியப் பிரச்னைகளுக்கு குரல் கொடுத்து இரண்டு முறை நாடாளுமன்றத்திலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டேன். மாநில பிரச்னைகளையும் எழுப்பினேன்.
அசாமின் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு பெற்றேன். ஆனால், எனது கட்சி உறுப்பினர் தவறாக வாக்களித்ததால் இரண்டு மாநிலங்களவை உறுப்பினர் பதவியையும் பாஜக கைப்பற்றியது.
நான் மிகுந்த வலியுடன் உங்களிடம் வெளிப்படையாக ஒரு ரகசியத்தை சொல்ல விரும்புகிறேன். அசாம் காங்கிரஸ் கமிட்டியை சேர்ந்த பெரும்பாலான தலைவர்கள் பாஜகவை எதிர்த்து சண்டையிடுவதற்கு பதிலாக மாநில பாஜக அரசுடனும் குறிப்பாக முதல்வருடனும் நெருக்கமான தொடர்பில் உள்ளார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.