வடமேற்கு தில்லியின் ஜஹாங்கீர்புரியில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக 14 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வன்முறையில் ஈடுபட்டவர்களின் புதிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
அந்த சிசிடிவி காட்சியில், வன்முறையாளர்கள் தடிகளுடன் ஒன்றாக இருக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. அதில், ஏப்ரல் 15ஆம் தேதி இரவு என்று பதிவாகியுள்ளது.
இந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், இந்த வன்முறை முன்கூட்டியே திட்டமிடப்பட்டது என்று சந்தேகிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், இந்த சிசிடிவி காட்சிகளின் உண்மைத் தன்மை குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சிசிடிவி காட்சியில் 5 முதல் ஆறு பேர் இருக்கிறார்கள். அவர்கள் தடிகளை சேகரிப்பது பதிவாகியுள்ளது. அவர்களை அடையாளம் காணும் பணி நடப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
வடமேற்கு தில்லியின் ஜஹாங்கீர்புரி பகுதியில் சனிக்கிழமை ஹனுமன் ஜெயந்தி ஊர்வலத்தின்போது வன்முறை வெடித்தது. வன்முறையில் கல்வீச்சும், சில வாகனங்களும் தீ வைத்து கொளுத்தப்பட்டன. இதில் காவலர்கள் பலர் காயமடைந்தனர். வன்முறையைத் தொடர்ந்து, அந்தப் பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. தில்லி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுபற்றி தில்லி வடமேற்கு காவல் துணை ஆணையர் கூறுகையில், "இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல் துறையினர் 8 பேர் உள்பட 9 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டது. காவல் உதவி ஆய்வாளர் ஒருவருக்கு குண்டடிபட்டுள்ளது. அவரது உடல்நிலை சீராக உள்ளது" என்றார்.
பின்னர் கூறுகையில், "இதுதொடர்பாக மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதுவரை மொத்தம் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்" என்றார்.