புதுதில்லி: பிரதமர் நரேந்திர மோடி, குடிமை பணிகள் நாள் நிகழ்ச்சியில் உரையாற்றியபோது, நாட்டின் முன்னேற்றத்தை விரைவுபடுத்துவதில் அரசு ஊழியர்கள் பங்களிக்கிறார்களா என்பதை சுயபரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.
நாட்டின் முன்னேற்றத்தை விரைவுபடுத்துவதற்கு நாம் பங்களிக்கிறோமா? என்று அரசு ஊழியர்களிடம் பிரதமர் மோடி கேள்வி எழுப்பினார். ஒவ்வொரு அரசு ஊழியரும் இந்தியாவை புதிய உயரத்திற்கு இட்டுச் செல்ல வேண்டும் என்று குடிமை பணிகள் விழாவில் பிரதமர் மோடி கூறினார்.
இன்று, குடிமை பணிகள் தினத்தன்று, 2021 ஆம் ஆண்டுக்கான பொது நிர்வாகத்தில் சிறந்து விளங்கியவர்களுக்கான விருதுகளை பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், "எங்கள் நாடு எந்த அரசாலும், வம்சத்தினாலோ உருவாக்கப்பட்டதல்ல, மாறாக ஒவ்வொரு தலைமுறை மக்களின் தியாகத்தின் மூலம் உருவாக்கப்பட்டது" என்று அவர் கூறினார்.
ஆட்சி சீர்திருத்தங்கள் அரசு ஊழியர்களின் இலக்காக இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டு பேசினார். குடிமக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதற்கான வழிகளை நீங்கள் எப்போதும் சிந்திக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை அனைவரும் தவிர்க்க வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார்.
குடிமை பணிகள் தினத்தை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி இன்று புதுதில்லி விஞ்ஞான் பவனில் பொது நிர்வாகத்தில் சிறந்து விளங்கியவர்களுக்கான விருதுகளை வழங்கினார்.