அசாதாரண சூழலை ஏற்படுத்தும் முயற்சிகள் நாட்டின் ஒற்றுமைக்கு உகந்ததல்ல என சிவசேனை கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ரெளத் தெரிவித்தார்.
வடமேற்கு தில்லியின் ஜஹாங்கீர்புரி பகுதியில் சனிக்கிழமை ஹனுமன் ஜெயந்தி ஊர்வலத்தின்போது வன்முறை வெடித்தது. வன்முறையில் கல்வீச்சும், சில வாகனங்களும் தீ வைத்து கொளுத்தப்பட்டன.
இதில் காவலர்கள் பலர் காயமடைந்தனர். வன்முறையைத் தொடர்ந்து, அந்தப் பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. தில்லி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிக்க | நவீன முறையில் ராணுவத் தளவாட உற்பத்தி: ராஜ்நாத் சிங்
இந்நிலையில் இந்த விவகாரம் நாடு முழுவதும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகளும் மத்திய அரசை விமர்சித்து வருகின்றன.
இதுதொடர்பாக வியாழக்கிழமை பேசிய சிவசேனை கட்சியின் மக்களவை உறுப்பினரும், அக்கட்சியின் செய்தித் தொடர்பாளருமான சஞ்சய் ரெளத், “தில்லி கலவரத்திற்கு யார் காரணம் என்பது அனைவருக்கும் தெரியும். நாட்டில் தற்போது என்ன நடந்துவருகிறது என்பது அனைவரும் அறிந்ததே. நாட்டில் அசாதாரண சூழலை ஏற்படுத்த முயற்சிகள் நடந்து வருகிறது. இது நாட்டின் ஒற்றுமைக்கு உகந்ததல்ல” எனத் தெரிவித்தார்.