நவீன முறையில் உள்நாட்டு ராணுவ தளவாட உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வருவதாக ராணுவ தளபதிகள் மாநாட்டில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ராணுவத் தளபதிகள் மாநாடு, தில்லியில், ஏப்ரல் மாதம் 18-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை நடைபெறுகிறது. இம்மாநாட்டில், நாட்டின் பாதுகாப்புச் சூழல்கள், எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு நிலவரம் மற்றும் சவால்கள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிக்க | எழுவர் விடுதலை விவகாரம்: உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்
இந்நிலையில் இந்த மாநாட்டின் நான்காவது நாளான இன்று மத்தியப் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு இந்திய ராணுவத்தின் மூத்த அதிகாரிகளிடையே சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், “இந்திய இராணுவத்தின் மீது கோடிக்கணக்கான மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். நாட்டின் மிகவும் நம்பகமான மற்றும் உத்வேகம் அளிக்கும் அமைப்புகளில் ஒன்றாக பாதுகாப்புத்துறை திகழ்கிறது. உள்நாட்டுப் பாதுகாப்பு, மனிதாபிமான உதவிகள், பேரிடர் மீட்பு பணிகள், மருத்துவ உதவி என அனைத்து துறைகளிலும் ராணுவத்தின் பங்களிப்பின் காரணமாக நிலையான சூழலை பராமரிக்க உதவுகிறது” எனத் தெரிவித்தார்.
இதையும் படிக்க | சென்னையில் கூடுதலாக ஒரு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம்
மேலும், “மண்டல ஒருமைப்பாட்டைக் பாதுகாக்கும் வகையில் தீவிர வானிலை மற்றும் விரோதப் படைகளை எதிர்த்துப் போராடும் நமது துருப்புக்களுக்கு நவீன ஆயுதங்கள், உபகரணங்கள் மற்றும் ஆடைகள் கிடைப்பதை உறுதிசெய்வதில் அரசு போதிய கவனம் செலுத்தும்” என்றும் தெரிவித்தார்.