நாகாலாந்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அங்கு அதிரடி அரசியல் மாற்றம் நிகழ்ந்துள்ளது. நாகா மக்கள் முன்னணியில் உள்ள 25 எம்எல்ஏக்களில் 21 எம்எல்ஏக்கள் தேசிய ஜனநாயக முற்போக்கு கட்சியில் நேற்று சேர்ந்துள்ளனர்.
நாகா மக்கள் முன்னணியை சேர்ந்த 21 எம்எல்ஏக்கள் கட்சி மாறியதால், 60 சட்டப்பேரவை உறுப்பினர்கள் கொண்ட நாகாலாந்து சட்டப்பேரவையில் முதல்வர் நெய்பியு ரியோ தலைமையிலான தேசிய ஜனநாயக முற்போக்கு கட்சியின் பலம் 42ஆக உயர்ந்துள்ளது. நாகா மக்கள் முன்னணிக்கு 4 எம்எல்ஏக்களும் பாஜகவுக்கு 12 எம்எல்ஏக்களும் சுயேச்சை இரண்டு பேரும் உள்ளனர்.
அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தலில் நாகா மக்கள் முன்னணி தனித்து போட்டியிடும் என அக்கட்சி தலைவர் சுர்ஹோசேலி அறிவித்திருந்த நிலையில், எம்எல்ஏக்கள் கட்சி மாறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
இதுகுறித்து நாகாலாந்து சபாநாயகர் ஷேரிங்கைன் லோக்ங்குமர் பிறப்பித்த உத்தரவில், நாகா மக்கள் முன்னணி சட்டப்பேரவை குழு தேசிய ஜனநாயக முற்போக்கு கட்சியில் சேர விருப்பம் தெரிவித்துள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க | வாழ்த்து மழையில் ரோஹித் சர்மா: விருப்பங்கள் சாத்தியமாகட்டும்!...
கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம், தேசிய ஜனநாயக முற்போக்கு கட்சி, பாஜக அங்கம் வகிக்கும் ஆளும் மக்கள் ஜனநாயக கூட்டணியில் நாகா மக்கள் முன்னணி சேர்ந்தது. இதன் மூலம், அங்கு எதிர்க்கட்சியே இல்லாத சூழல் உருவானது. நாகா அரசியல் பிரச்னையை தீர்க்கும் வகையில் இந்த அரசியல் நிகழ்வு நடந்ததாக கூட்டணி சார்பில் தெரிவிக்கப்பட்டது.