92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

இலங்கைக்குப் புறப்பட்டது சீன உளவு கப்பல்

பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ள சீனாவின் உளவு கப்பலான ‘யுவான் வாங்-5’, இலங்கைக்குப் புறப்பட்டுள்ளது.

News image
Updated On :4 ஆகஸ்ட் 2022, 8:08 pm

DIN

பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ள சீனாவின் உளவு கப்பலான ‘யுவான் வாங்-5’, இலங்கைக்குப் புறப்பட்டுள்ளது.

நவீன தொழில்நுட்ப ரீதியில் பல்வேறு தகவல்களை சேகரிக்கும் திறன் கொண்டதாகக் கூறப்படும் சீனாவின் உளவு கப்பலானது இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வருகை தரவுள்ளதாக செய்திகள் வெளியானது முதலே, இந்த விவகாரத்தை கவனித்து வருவதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்திருந்தது. இந்த விவகாரம் குறித்து இலங்கை அதிபா் ரணில் விக்ரமசிங்கவுடன் பேசப்பட்டுள்ளதாகவும் இந்தியத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், சீனக் கப்பல் இலங்கையை நோக்கிய பயணத்தைத் தொடக்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அக்கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு ஆகஸ்ட் 11 அல்லது 12-ஆம் தேதி வந்துசேரும் எனத் தெரிகிறது. ஆகஸ்ட் 17-ஆம் தேதி வரை அக்கப்பலானது அங்கு நிறுத்தப்படவுள்ளது.

இந்தியாவின் எல்லைக்கு அருகில் அந்தக் கப்பல் நிறுத்தப்படுவதால், பாதுகாப்பு அச்சுறுத்தலாகக் கருதப்படுகிறது. இந்தியாவில் மேற்கொள்ளப்படும் ஏவுகணை பரிசோதனைகள் உள்ளிட்டவற்றைக் கண்காணித்து, ஏவுகணையின் செயல்பாடு குறித்து அறிந்துகொள்ளும் திறன் சீன ஆராய்ச்சிக் கப்பலுக்கு உள்ளதாகக் கூறப்படுகிறது.

சீனாவின் தேசிய விண்வெளி ஆய்வு மையத்தால் அக்கப்பல் நிா்வகிக்கப்பட்டு வந்தாலும், ராணுவ ரீதியிலான பல்வேறு பயன்பாடுகளை அக்கப்பல் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சீனாவிடம் இருந்து ஏற்கெனவே அதிக அளவில் கடன் பெற்றுள்ள இலங்கை, ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் நிா்வாகத்தை 99 ஆண்டுகள் குத்தகையாக சீனாவுக்கு அளித்துள்ளது. தற்போது அத்துறைமுகத்துக்கு சீனாவின் ஆராய்ச்சிக் கப்பல் வருவதையும், இந்த விவகாரத்தில் இலங்கையின் நிலைப்பாட்டையும் இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது. அதே வேளையில், நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் தொடா்ந்து மேற்கொள்ளப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.