அரசு தொடக்கப் பள்ளிகளில் உள்ள அனைத்து வகுப்பறைகளையும் ஸ்மார்ட் வகுப்பறைகளாக மாற்ற புதுச்சேரி அரசு திட்டமிட்டுள்ளது.
ஆரம்பப் பள்ளிகளில் ஆடியோ, காட்சி சாதனங்கள், ஸ்மார்ட் தொலைக்காட்சிகள் மற்றும் புரொஜெக்டர்கள் ஆகியவற்றுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்புகளை அறிமுகப்படுத்த அதிகாரிகள் திட்டங்களை வகுத்துள்ளனர்.
முதல்கட்டமாக 200 தொடக்கப் பள்ளிகள் ஸ்மார்ட் வகுப்பறைகளாக மாற்றப்படும். ஒவ்வொரு வகுப்பறையையும் மாற்றுவதற்கு சுமார் 1.5 முதல் 2 லட்சம் ரூபாய் தேவைப்படுவதாகவும், இதற்கான பணம் சமக்ரா சிக்ஷா அபியான் மூலம் பெறப்படும் என்றும் புதுச்சேரி கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
புதுச்சேரி கல்வி அமைச்சர் ஆ.நமச்சிவாயம் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
தொடக்கப் பள்ளிகளை ஸ்மார்ட் வகுப்புகளாக மாற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். இதற்காக நிதி திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.
தற்போது யூனியன் பிரதேசம் முழுவதும் உள்ள 10 மற்றும் 12ம் வகுப்பு அரசுப் பள்ளி வகுப்பறைகள் தகவல்தொடர்பு தொழில்நுட்ப வகுப்பறைகளாக உள்ளன. இதையே நடுநிலை மற்றும் தொடக்கப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளோம். இதன் மூலம் அனைத்து அரசுப் பள்ளிகளின் வகுப்பறைகளையும் ஸ்மார்ட் வகுப்புகளாக மாற்றுவோம்.
புதுச்சேரி அரசு ஏற்கனவே பெங்களூரைச் சேர்ந்த விற்பனையாளருடன் ஸ்மார்ட் வகுப்பறைகளாக மாற்றுவதற்கான ஆலோசனைகளைத் தொடங்கியுள்ளது. இது தொடர்பாக மாநில பள்ளிக் கல்வித்துறை செயலர் ஏ.முத்தம்மா உயர்மட்ட விவாதத்தை நடத்தினார்.