7வது நீதி ஆயோக் கூட்டத்தில் தான் பங்கேற்கப் போவதில்லை என தெலங்கானாமுதல்வர் சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார்.
நாளை தில்லியில் நடைபெறும் 7வது நீதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கமாட்டேன் என தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இதில் அவர் கூறியதாவது:
மாநில அரசாங்கங்களுக்கு மதிப்பளிக்காமல் நடத்தும் நீதி ஆயோக் கூட்டம் தேவையில்லாதது. மாநில அரசுக்கு தேவையானபடி நீதி ஆயோக் திட்டங்களை மாற்றியமைக்கும் வழிமுறைகள் இல்லை. இந்தியாவில் பல்வேறு மாநிலங்கள் உள்ளது. தில்லிக்கு மட்டுமே செல்லுபடியாகும் திட்டங்களை அனைத்து மாநிலங்களும் ஏற்றுக்கொள்ள முடியாது.
நீதி ஆயோக் உருவானதன் நோக்கமே வலுவான மாநிலங்களால் வலுவான நாட்டை உருவாக்குவது. திட்டக்குழு இருக்கும் போது மாநில அரசுகளின் கருத்துகளுக்கு மதிப்பிருக்கும். ஆனால் நீதி ஆயோக்கில் இந்த மாதிரியான உரையாடல் எதுவும் இல்லை. உயர் பதவியில் இருக்கும் சில அரசியல்வாதிகள் புல்டோஜர்களை பயன்படுத்துகின்றனர். மக்களை கொல்கிறார்கள். 80:20 என்ற மதப் பெரும்பானமையை வளர்த்தெடுக்கின்றனர். அதனால் நாட்டில் அமைதியின்மை ஏற்படுகிறது. உலக அளவில் இதற்கு விமர்சனம் எழுந்தும் மத்திய அரசாங்கம் எந்த நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கூட்டாட்சி அரசாங்கத்திற்கு எதிராகவே மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. வரி விதிப்புகளில் கூட மாநில அரசாங்கத்தின் கருத்துகளை கேட்பதில்லை. இது 140 கோடி இந்தியர்களுக்கு நன்மையளிக்கப் போவதில்லை என எனக்கு தோன்றுகிறது.
வலுவான மாநிலங்களால் மட்டுமே வலுவான இந்தியாவை உருவாக்க முடியும். மேற்சொன்ன காரணங்களால் ஆகஸ்ட் 7ஆம் நாள் நடக்கும் நீதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதால் எந்த நன்மையும் ஏற்படப்போவதில்லை. மாநில அரசுகளை மத்திய அரசுக்கு இணையாக பார்க்காமல் சிறுமைபடுத்தும் மத்திய அரசின் நிலைபாடுகளை கண்டித்து இக்கூட்டத்தில் நான் பங்கேற்கப்போவதில்லை.