புது தில்லி: நாட்டின் சுதந்திர தினம் வரும் திங்கள்கிழமை கொண்டாடப்படவிருக்கும் நிலையில், தில்லியில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகன நிறுத்தும் வசதி ஞாயிற்றுக்கிழமை முதல் திங்கள்கிழமை பிற்பகல் வரை அனுமதிக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில், நாட்டின் சுதந்திர தினத்தன்று, மெட்ரோ ரயில் சேவை வழக்கம் போல இயங்கும் என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இது குறித்து மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், சுதந்திர தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தில்லி மெட்ரோ ரயில் நிலையங்களில் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி முதல் (ஆகஸ்ட் 14) திங்கள்கிழமை பிற்பகல் 2 மணி வரை (ஆகஸ்ட் 15) வாகனங்களை நிறுத்த அனுமதிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.