ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் நிகழ்ச்சியின் கடைசிப் போட்டி நாளை (ஆக. 25) இரவு 8 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில் காணொலி மூலம் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்.
நாடு முழுவதிலுமிருந்து 75 மையங்களிலிருந்து 15 ஆயிரம் மாணவர்கள் ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் இறுதி நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளனர். இதில் 2,900 பள்ளிகள் மற்றும் 2,200 உயர்கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றைச் சேர்ந்த மாணவர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.
ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் நிகழ்ச்சி, அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கான தொடக்கம், சிக்கல்களைத் தீர்ப்பது, எல்லைகளுக்கு அப்பாற்பட்டு சிந்திப்பது போன்றவற்றில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
சமூக பிரச்னைகள், நிர்வாகம் மற்றும் அரசு நிர்வாகம் சார்ந்த பிரச்னைகளைத் தீர்க்கும் நோக்கத்தில் மாணவர்களுக்கு வாய்ப்பை ஏற்படுத்தும் நிகழ்ச்சியாக ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் உள்ளது.
நாட்டில் புதிய கண்டுபிடிப்புகளுக்கு வாய்ப்பளிக்கும் வகையிலும் குறிப்பாக இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையிலும், கடந்த 2017ஆம் ஆண்டு முதல் ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.